குற்றம்

கள்ளக்குறிச்சி: ஓய்வு நேரத்தில் கள்ளச்சாராயம் விற்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது

kaleelrahman

கள்ளக்குறிச்சி அருகே ஓய்வு நேரத்தில் கள்ளச்சாராயம் விற்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரகுமார். ஓட்டுனரான இவர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஆகிய ஊர்களின் அரசு மருத்துவமனைகளில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர், ஓய்வு நேரங்களில் 108 - அவசர ஊர்தி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தனது இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் விற்பதாக எலவனாசூர் கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. கொட்டையூர் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் செல்போனில் அழைக்கும் மது குடிப்போருக்கு நேரில் சென்று சாராய பாக்கெட்டுகளை விற்றுள்ளார்.

அப்போது உத்திரகுமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 25 சாராய பாக்கெட்டுகள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.