செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்நிலவூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக கரியாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் வனப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மூன்று பேர் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கையும் களவுமாக பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாது, கல்வராயன்மலை அருகே உள்ள மேல்நிலவூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மற்றும் ராமராஜ் ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூவரும் சேர்ந்து நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்தது ஒரு துப்பாக்கி 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ததும் தெரியவந்தது,
இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.