குற்றம்

கள்ளக்குறிச்சி: ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்: ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய பள்ளி ஆசிரியை கைது!

webteam

கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர் கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றிய புகாரில் பள்ளி ஆசிரியை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை காவல்நிலைய எல்லைக்குப்பட்ட எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசெல்வி(43). இவருடைய கணவர் இசையாஸ். ஜெயசெல்வி அதே கிராமத்தை சேர்ந்த அமலாமேரி மற்றும் அவரது உறவினர்களிடம் ஏலச்சீட்டு கட்டி முடித்துள்ள நிலையில், தனக்கு தரவேண்டிய ரூபாய் 38,66,650/- பணத்தை தராமல் ஏமாற்றியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் இ.கா.ப அவர்களிடம் புகார் அளித்தார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக விசாரணை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டதன் பேரில், குற்றப்பிரிவு காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஏலச்சீட்டு நடத்தி பணத்தை ஏமாற்றியதுடன், பணம் கட்டியவர்கள் திரும்ப கேட்கும் போது ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்விடுத்துள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த அமலாமேரி மற்றும் அண்ணாதுரை என்கிற குழந்தைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாகியுள்ள மற்ற இருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.