குற்றம்

திருப்பதிக்கு நெய் அனுப்பியதில் நடந்த முறைகேட்டில் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா?

நிவேதா ஜெகராஜா

மதுரை ஆவினில் இருந்து திருப்பதிக்கு நெய் அனுப்பியதில் நடந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியுள்ளது. முன்னதாக திருப்பதியில் லட்டு தயாரிக்க அனுப்பப்படும் நெய் தொடர்பான விவரங்கள் பதிவேட்டில் இடம்பெறாதது கடந்த மே மாதம் தெரியவந்தது. இதற்காக அதிகாரிகள் 5 பேர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இவ்விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா என விசாரணை தொடங்கியுள்ளது.

முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே ரூ.3 கோடி பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் தேடி வருவதும், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.