தீண்டாமை வேலி
தீண்டாமை வேலி புதிய தலைமுறை
குற்றம்

"என்னது தீண்டாமை வேலியா.. உடனே விசாரணை பண்ணுங்க" - கரூர் ஆட்சியருக்கு நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

PT WEB

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, இடையப்பட்டி அருகே உள்ள சித்திர சீலமநாயக்கனூரை சேர்ந்த மனுதாரர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். அப்போது வேறு பிரிவினரை சேர்ந்தவர்களை விருப்பத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் தங்களது சொந்த ஊருக்கு சென்று, பரமசிவம் என்பவரின் மகன் திருமணத்தை கோவிலில் நடந்த திட்டமிட்ட போது, ஊரில் உள்ளவர்கள் அவர்களை ஊருக்குள் விடாமலும், கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.

வாகைகுளம்

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தை அவர்கள் நாடினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவர்களது திருமணம் கோவிலில் நடைபெற்றது. இந்நிலையில் இவர் மீண்டுமொருமுறை வழக்கு தொடுத்துள்ளார். அதில்,

“கடந்த அக்டோபர் 3 ம் தேதி தனது வீடு மற்றும் எனது உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் பாதையை நான்கு புறமும் வேலி அமைத்து தடுத்து, அவர்களின் பட்டா இடத்தில் ஷெட் அமைத்துள்ளனர்.

மேலும் கிராமத்தில் வரும் தண்ணீரை பிடிக்க விடாமல், உறவினர்கள் வீட்டிற்கு செல்ல முடியாதபடி தீண்டாமை வேலி அமைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே சொந்த ஊருக்குள் செல்வதற்கு தீண்டாமை வேலியை அகற்றி, எங்களது சொந்த சொத்துக்களை மீட்டு, கோவிலுக்குள் செல்லவும், குடிநீர் மற்றும் இதர காரியங்களில் கலந்து கொள்ளும் வகையிலும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை விசாரணை தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதி விசாரிக்கையில், “வேலி அமைத்துள்ள இடம் பட்டா நிலமா, அரசு புறம்போக்கு நிலமா? தீண்டாமை வேலி இருக்கிறதா என்பது குறித்து காவல்துறை உரிய முறையில் விசாரணையை தொடங்க வேண்டும். தீண்டாமை வேலியாக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இது கவனம் கொள்ள வேண்டிய குற்றச்சாட்டு” என்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர், பாலவிடுதி காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.