குற்றம்

3 பேர் சுட்டுக்கொலை: விசாரணை வளையத்தில் சிக்கிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி

webteam

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில், கொலைசெய்யப்பட்டவரின் மனைவி உட்பட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் மட்டும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் கொலைக்கு 2 துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளனர் என தெரியவந்த நிலையில் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த துப்பாக்கி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபே என்பருடையது என தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் ராஜீவ் துபேவையும், அவரது மனைவி மது துபே என்பவரையும் போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். மது துபே ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. இவரது காரைத்தான் கொலை செய்ய கொலையாளிகள் பயன்படுத்தியுள்ளனர். காரையும், துப்பாக்கியும் தெரிந்தே இவர்கள் கொலையாளிகளுக்கு கொடுத்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.