குற்றம்

எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை – ஹரியானாவில் ஒருவர் கைது

Veeramani

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்தவர்களில் ஒருவர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டார்.

வங்கி ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஹரியானா சென்று தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசார், குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்த நிலையில் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

முன்னதாக சென்னை வேளச்சேரி, விஜயநகர் எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம்-மில் கடந்த 18 மற்றும் 19-ம் தேதி டெபாசிட் மிஷின் மற்றும் பணம் எடுக்கும் மிஷினில் 13,50,000 ரூபாய் இருக்க வேண்டிய நிலையில், 8 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. காணாமல் போன நான்கு லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை கண்டுபிடித்து தருமாறு வேளச்சேரி போலீசாரிடம் வங்கி முதன்மை மேலாளர் தெபாசிஸ் பிரியரஞ்சன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் சி.எஸ்.ஆர் பதிவு செய்தனர்.

அதேபோல் தரமணி, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ.வங்கி ஏடிஎம்-மிலும் 3 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மாயமாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்மநபர்கள் ஏடிஎம் மையங்களில் நுழைந்து பணம் போடுவதுபோல் நடித்து, பணத்தை இயந்திரத்தில் வைப்பர். இயந்திரம் பணத்தை எடுக்கும்போது சுமார் 20 நொடிகள் பணத்தை விடாமல் பிடித்தவாறே இருக்கும்போது, அவர்களது கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதோடு, இயந்திரத்தின் உள்ளே செல்லாத பணத்தையும் அவர்கள் எடுத்துக் கொள்வர். இதுபோல் சுமார் 10 முறை இந்த ஏடிஎம் இயந்திரத்திலேயே இதுபோல செய்து 1.5 லட்சம் வரை எடுத்துள்ளனர்.

இதேபோல் தரமணி, விருகம்பாக்கம், போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்-களிலும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வாங்கி மேலாளர்  தினேஷ் கர்ணா தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தரமணி போலீசார் சி.எஸ்.ஆர். பதிவுசெய்தனர். இதுபோல சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்களில் சுமார் 50 இலட்ச ரூபாய் கொள்ளைபோயிருந்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.