குற்றம்

பட்டப்பகல்.. ஒன்றரை மணி நேரம்.. - திருவள்ளூரில் நடந்த கொள்ளைச் சம்பவம்.!

webteam

திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 29 சவரன் நகைகள் மற்றும் லேப்டாப்பைக் கொள்ளையடித்துச் சென்ற  கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு இ.எஸ்.என் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அம்பத்தூரில் தனியார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். வழக்கம் போல் வெங்கடேசன் தொழிற்சாலைக்குச் செல்ல, அவரது மனைவி சசிகலா வங்கிக்கு சென்றதாகத் தெரிகிறது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்த சசிகலா வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 29.5 சவரன் நகைகள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.