குற்றம்

வாகன விபத்தில் ஆள் மாறாட்டம்: தம்பிக்கு பதிலாக ஆஜரான அண்ணன் கைது - சிக்கிய வக்கீல்

webteam

சீர்காழி அருகே இருசக்கர வாகன விபத்தில் ஆள் மாறாட்டம் செய்து, உண்மையான குற்றவாளி வெளிநாடு சென்றதால் அவருக்கு மாற்றாக நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணனை கைது செய்துள்ளனர். போலியான நபரை ஆஜர் செய்த வக்கீல் குமாஸ்தாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த ஒருவர் இறந்துவிட்டார். இது தொடர்பாக சீர்காழி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வழுதலைக்குடி பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவருக்கு பதிலாக அவரது அண்ணன் குணசேகரன் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகி வந்துள்ளார்.

இது குறித்து சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் வந்ததின் அடிப்படையில் ஆள் மாறாட்டம் செய்த சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வழுதலைக்குடி பகுதியைச் சேர்ந்த அசோக் வெளிநாடு சென்றுள்ளதும், அவருக்கு பதிலாக அண்ணன் குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜரானதும் தெரியவந்தது. அதனையடுத்து அண்ணன் குணசேகரனை கைதுசெய்த போலீசார் இதற்கு துணைபோன வக்கீல் குமாஸ்தா திருஞானம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.