குற்றம்

’ரூ.150 மதிப்பிலான மதுபாட்டில் ரூ400க்கு விற்கிறார்கள்’ - கூகுள்பே, பேடிஎம்-ல் பணம் வசூல்!

webteam

கோவை சூலூர் அருகே அரசு உத்தரவை மீறி மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். காவல்துறை ரெய்டுக்கு பயந்து google pay, Paytm ஸ்கேனர் மூலம் பணம் வசூல் செய்கின்றனர் கள்ள சந்தை விற்பனையாளர்கள்.

வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் இன்று அரசு மதுபானக்கடைகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற பார்களில் மதுபானங்கள் விற்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடைகள் கடை எண் 2212 மற்றும் 2267 ஆகிய கடைகளில் இயங்கும் பார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். சட்டவிரோதமாக விற்கப்படும் மது பாட்டில்களுக்கான பணத்தை கூகுள்பே மற்றும் paytm ஸ்கேனர் வைத்து வசூல் செய்யும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது.

டிஜிட்டல் முறையில் பணத்தை பெற்றுக்கொண்டால் திடீரென காவல்துறை ஆய்வு மேற்கொண்டாலும் பணமாவது தப்பிக்கும் என்ற நம்பிக்கையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் இருப்பவர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.

150 ரூபாய் விற்கக்கூடிய ஒரு மது பாட்டிலை 300 முதல் 400 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்துவரும் நபர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.