விருதுநகரில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் கணவர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்தார்.
விருதுநகர் என்ஜிஓ காலனி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், கண்ணன் திருமங்கலத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த கண்ணன், கற்பகத்தை கத்தியால் குத்தியுள்ளார். இதில் கற்பகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கண்ணன் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற ஊரக காவல்துறையினர் உயிரிழந்த கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.