குற்றம்

வரதட்சணைக்காக இளம்பெண் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை.. கணவரின் பெற்றோரும் கைது

Sinekadhara

சேலத்தில் இளம்பெண் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவரின் பெற்றோரை காவல்துறையினர் வரதட்சணை கொடுமை வழக்கில் கைது செய்தனர்.

சேலம் ரெட்டிபட்டி பகுதியில் வசித்து வந்த தனுஸ்ரீயாவுக்கும் - கீர்த்திராஜ் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 11-ம் தேதி தனுஸ்ரீயாவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலைசெய்துவிட்டு கணவர் கீர்த்திராஜ் தற்கொலை என்று நாடகம் ஆடினார். பின்னர் காவல்துறையினரின் விசாரணையில் கொலை சம்பவம் அம்பலமானதை அடுத்து கீர்த்திராஜை காவல்துறையினர் கைது செய்தனர். கீர்த்தி ராஜ் மற்றும் மனைவி தனுஸ்ரீயா ஆகிய இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்னை எழுந்து வந்ததாகவும், கீர்த்திராஜ் மற்றும் அவரது பெற்றோர் வரதட்சனை கேட்டு தனுஸ்ரீயாவை தொல்லைப்படுத்தி வந்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக சேலம் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார். பல்வேறு தரப்பிலும் விசாரணை நடத்தி சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி அளித்த அறிக்கையின் அடிப்படையில் தனுஸ்ரீயாவை அவரது கணவர் உள்ளிட்டோர் வரதட்சணை கேட்டு தொல்லைபடுத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கீர்த்தி ராஜின் தந்தை பெரியசாமி மற்றும் தாயார் ரஞ்சனி ஆகியோரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.