குற்றம்

மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர் – ஆர்டிஓ விசாரணையில் சிக்கினார்

webteam

ஆலங்குடி அருகே மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காடு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை பர்னாந்து என்பவருக்கும் அரசடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கிய மேரி என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஆரோக்கிய மேரி (31) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் வடகாடு காவல் நிலையத்தில் தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையிலும் இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் நிறைவடாத சூழலிலும் இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டார்.

அப்போது குடும்பப் பிரச்னையின் காரணமாக கணவன் குழந்தை பர்னாந்து மனைவி ஆரோக்கிய மேரியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய வடகாடு போலீசார் குழந்தை பர்னாந்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.