குற்றம்

“தினமும் குடித்துவிட்டு துன்புறுத்துகிறார்” புகாரளிக்க சென்ற மனைவியை குத்தி கொன்ற கணவர்

webteam

தென்காசி அருகே காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற மனைவியை கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பாக சித்ரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இவர்கள் இருவரும் ஆலங்குளம் பகுதியில் ஒரு வீடு எடுத்து வசித்து வந்ததாகத் தெரிகிறது. அதன்படி சித்ராவிற்கு ஒரு மகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக குடும்பத்தில் கடுமையான பிரச்சினை நிலவி வந்த நிலையில் அடிக்கடி முருகன் குடித்துவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் முருகனின் இரண்டாவது மனைவியான சித்ரா புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த காவல்துறை முருகன் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை நாளை வருமாறு கூறியிருக்கிறார்கள்.

இந்தநிலையில் தனது மகளுடன் சித்ரா காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முருகன் திடீரென மகளிர் காவல் நிலையம் அருகாமையிலேயே சித்ராவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த சித்ராவை அருகிலிருந்தவர்கள் மீட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆலஙகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.