குற்றம்

உசிலம்பட்டி: 14 வயதில் தாயான சிறுமிக்கு 7 மாதத்தில் பிறந்த குழந்தை..கணவர் போக்சோவில் கைது!

webteam

உசிலம்பட்டி அருகே குழந்தை திருமணத்தால் 14 வயதில் தாயான சிறுமி குறித்த வழக்கில் கணவரை போக்சோ - வில் கைது செய்துள்ளது காவல் துறை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலக்காபட்டியைச் சேர்ந்த 27 வயதான உதயக்குமார் என்பவருக்கு தேனியைச் சேர்ந்த மணி - சந்திரா என்பவரது 14 வயது மகளை மறைமுகமாக குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணத்திற்கு பின் உதயக்குமாரின் தோட்டத்து வீட்டில் மறைமுகமாக வாழ்ந்து வந்த சூழலில் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த 14 வயது சிறுமிக்கு நேற்று வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்து இறந்துள்ளது.

14 வயதில் தாயான சிறுமியின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால் அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் 14 வயதில் தாயான சிறுமி குறித்து அறிந்த மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து, சம்பவம் தொடர்பாக போலிசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார், வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது சிறுமியின் கணவர் உதயக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.