குற்றம்

வரதட்சனை கேட்டு கொடூரமாக பெண்ணை துன்புறுத்திய கணவன் கைது: மாமனார் மாமியாருக்கு வலைவீச்சு

webteam

 சமயபுரத்தில் வரதட்சனை கேட்டு பெண்ணொருவர் கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டுள்ளார். அக்கணவரை லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரது மாமனார் மாமியாரை தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவஞானம் மற்றும் தமிழ்ச்செல்வி. இவர்களது மகன் பாரத் (வயது 34). இவர் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 9 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சாவித்திரியை, வரதட்சனை கேட்டு கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் தொடர்ந்து கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார். மருத்துவமனையில் இருந்த சாவித்திரி, பின் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்திருந்திருக்கிறார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிந்து கணவர் பாரத்-ஐ கைது செய்துள்ளனர். மேலும், அவரது தாய் மற்றும் தந்தை இருவரையும் தேடி வருகின்றனர்.