குற்றம்

தூத்துக்குடி: கோவிலில் பெண் பக்தர்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமரா- போலீசார் விசாரணை

JustinDurai

தூத்துக்குடியில் அம்மன் கோவிலில் பெண்கள் குளியலறையில் இருந்து 3 ரகசிய கேமராக்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கோவிலில் உள்ள குளியலறையுடன் கூடிய பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமிரா இருந்ததை பெண் பக்தர் ஒருவர் கண்டறிந்து கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், கோயிலில் உள்ள குளியலறையில் சோதனையிட்ட போது, அங்கிருந்து மேலும் 2 ரகசிய கேமராக்கள் சார்ஜருடன் கண்டெடுக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, தங்களை பிடிக்காத சிலர் வேண்டுமென்றே கேமராவை வைத்திருக்கலாம் என்றும், சிசிடிவி கேமராக்கள் பழுதாகியிருப்பதால் அவர்களை கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்தனர்.