குற்றம்

ஆலங்குளம்:பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை ரூ.3 லட்சம் பணம் துணிகர கொள்ளை

kaleelrahman

ஆலங்குளம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம் அடுத்த உடையம்புளி கிராமத்தை சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் முத்து (52). விவசாயியான இவருக்கு வேல்மயில் என்ற மனைவியும் இசக்கியம்மாள், சிவனியம்மாள், மாரியம்மாள் ஆகிய மூன்று மகள்களும் முருகன் (22) என்ற மகனும் உள்ளனர். மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில் முத்து, வேல்மயில், முருகன் மற்றும் முத்துவின் அம்மா சுடலியம்மாள் ஆகியோர் மட்டுமே வீட்டில் இருந்து வந்துள்ளனர்.


இந்தநிலையில் நேற்று மதியம் முத்து தனது மனைவி மற்றும் அம்மாவை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த முருகன் வீட்டை பூட்டிவிட்டு விளையாடச் சென்றுள்ளார். முருகன் விளையாடிவிட்டு மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பதறிபோன முருகன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஆலங்குளம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் முத்துவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுமார் 40 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் கைரேகை நிபுணர் ஈஸ்வரணை அழைத்து வந்து கைரேகையை பதிவு செய்தனர். மேலும் திருட்டு நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச் சென்று திரும்பி வந்துவிட்டது. பட்டப்பகலில் விவசாயியின் வீட்டில் நகை பணம் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.