குற்றம்

கொலை குற்றவாளி தஷ்வந்த் மீண்டும் கைது

webteam

மும்பையில் போலீசாரிடம் இருந்து தப்பிய கொலை குற்றவாளி தஷ்வந்த், மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் சிறுமி ஹாசினியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, செலவுக்கு பணம் தர மறுத்ததாக ஆத்திரத்தில் தனது தாயை கொன்றுவிட்டு நகைகளுடன் அவர் தலைமறைவானார். அவரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில், தஷ்வந்தை மும்பையில் தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சென்னை அழைத்து வருவதற்காக விமான நிலையத்திற்கு அழைத்து வந்தபோது, வழியில் கழிவறை செல்வதாக கூறி தஷ்வந்த் தப்பியோடினார். அவரை மும்பை போலீசாருடன் இணைந்து தமிழக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அந்தேரி பகுதியில் பதுங்கியிருந்தபோது, தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து நாளை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.