குற்றம்

“தடை செய்யபட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடவில்லை”: பப்ஜி மதன், மனைவி வாதம்

Veeramani

யூடியூப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன் கடந்த ஜூன் 18-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் ஜூலை மாதம் 6-ம்தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் பப்ஜி மதனை போலீசார் ஆஜர்படுத்தி உள்ளனர்.

குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பப்ஜி மதன் அறிவுரை கழகத்தில் ஆஜராகி தன் மீது போடப்பட்டுள்ள குண்டாஸ் ரத்து செய்ய வாதிட வேண்டும். அதற்காக அவர் ஆஜராகி உள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் மாசிலாமணி, ரகுபதி, ராமன் ஆகியோர் முன் பப்ஜி மதன் ஆஜரானார். அப்போது அவரது மனைவி கிருத்திகா தனது குழந்தையுடன் சென்று வாதிட்டார்.

"தடை செய்யபட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடவில்லை. சீனா செயலிதான் தடை செய்யப்பட்டுள்ளது. கொரியா வெர்ஷன் ஆன்லைன் விளையாட்டை தான் விளையாடி பதிவேற்றினோம். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவிற்கு தவறு செய்யவில்லை. சாதாரண சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா அறிவுரை கழகத்தில் வாதிட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். பப்ஜி மதனின் பெற்றோரும் அறிவுரை கழக வளாகத்தில் அவரை சந்திக்க வந்தனர்.