குற்றம்

வாலிபரை கத்தியால் குத்தி கொன்று எரித்த தந்தை, மகன் - பகீர் பின்னணி

JustinDurai

குஜராத்தில் உறவினரின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்து எரித்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தின் பாவ்டி என்ற கிராமத்தில் உள்ள வாய்க்காலில் எரிந்த நிலையில் ஆண் சடலம்  ஒன்று கிடப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனிடையே ஏப்ரல் 2ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளிய சென்ற தனது மூத்த சகோதரர் ஜெய்ராஜ் போரிச்சா (24) என்பவரை காணவில்லை என ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இரு வழக்குகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்துவந்த போலீசார், சடலமாக மீட்கப்பட்டவர்தான் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஜெய்ராஜ் என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜெய்ராஜின் உடலில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் ஜெய்ராஜ் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீசார் பாவ்டி கிராமத்தில் துருவி, துருவி விசாரித்தனர். இந்த நிலையில் விசாரணையின்போது கிடைத்த ஒரு ரகசிய தகவலின் பேரில், திலு போரிச்சா மற்றும் அவரது தந்தை தேவ்கா போரிச்சா ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரிக்கையில் ஜெய்ராஜை கொலை செய்தது தாங்கள்தான் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-  ''திலுவின் உறவினர் மனைவியுடன் ஜெய்ராஜ் திருமணத்தை மீறிய உறவை வைத்திருந்தார். உறவை கைவிடும்படி திலு போரிச்சாவும் அவரது தந்தை தேவ்காவும் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் ஜெய்ராஜ் கேட்கவில்லை. இதையடுத்து கொலை நடந்த சம்பவ நாளன்று ஜெய்ராஜை பண்ணைக்கு வரவழைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் உறவை கைவிடமுடியாது என்பதில் உறுதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த திலு, ஜெய்ராஜை கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெய்ராஜ்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து திலுவின் தந்தை தேவ்கா, ஜெய்ராஜின் உடலை காய்ந்த புற்களை கொண்டு எரித்து அருகிலுள்ள வாய்க்காலில் வீசி எறிந்துள்ளார்'' என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செயத போலீசார் திலு போரிச்சா, தேவ்கா இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 இதையும் படிக்க: 'கால் பாய்' வேலையா? ஆசை வார்த்தையில் மயங்கி ரூ.17 லட்சத்தை ஏமாந்த இளைஞர்!