குற்றம்

சென்னையில் ரூ.23 லட்சத்தை திருடிச் சென்றதாக அசாமில் கைதான தனியார் நிறுவன காவலாளி!

webteam

சென்னை துரைப்பாக்கத்தில் தான் வேலை பார்க்கும் கம்பெனியில் இருந்து 23 லட்சம் ரூபாயை திருடிச் சென்றதாக அதன் காவலாளி அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை துரைப்பாக்கம், பிள்ளையார் கோயில் தெருவில் ஹீரா எண்டர்பிரைசஸ் என்ற கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 6 மாதமாக பிரப்பின் (38), என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர், கடந்த மாதம் 22 ஆம் தேதி கம்பெனியில் இருந்து 23 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதையடுத்து பணம் மாயமானதை அறிந்த கம்பெனி நிர்வாகத்தினர், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்நபர் செல்போன் சிக்னலை வைத்து கேரளாவில் இருப்பதை அறிந்து அங்கு விரைந்தனர். ஆனால் அவர் அங்கிருந்து ரயில் மூலம் அசாம் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், ரயில்வே போலீசார் உதவியுடன் ரயில் நிலையத்தில் வைத்து அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து அவரிடமிருந்து 19 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.