Govt school teacher arrested under POCSO in Villupuram pt web
குற்றம்

விழுப்புரம் | போக்சோவில் கைதான அரசு பள்ளி ஆசிரியர்.. கொந்தளிக்கும் ஊர் மக்கள்.. மறுக்கும் மாணவர்கள்

போக்சோவில் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட, மாணவர்கள் சிலரோ ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சண்முகப் பிரியா . செ

விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக உடற்கல்வி ஆசிரியரை போக்சோ வழக்கில் கைது செய்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறையினர் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், பள்ளி ஆசிரியர் மீது தவறில்லை எனக் கூறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் நகர பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக ஒருவர் பணியாற்றி வருகிறார். உடற்கல்வி ஆசிரியர் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவிகளை பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்று தவறான தொடுதலில் ஈடுபட்டதாக 5-க்கும் மேற்பட்ட மாணவிகள் பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்ச்சியடைந்த பொறுப்பு தலைமை ஆசிரியர் குழந்தைகள் பாதுகாப்பு கட்டுப்பட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இச்சம்பவம் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரியவரவே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வழக்குப் பதிவு செய்த போலீசார் நான்கு நாட்கள் ஆகியும் ஏன் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை என ஐந்திற்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு வருகைதந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையின் போது தலைமை ஆசிரியர் மற்றும் காவல்துறையினர் வழக்கு தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை தெரிவிக்கபடவில்லை எனவும் தங்களுக்கு தெரியாமல் தங்களது பிள்ளைகள் வாக்குமூலம் பெற்று காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை துறைரீதியான நடவைக்கை எடுக்க வேண்டஆசிரியரை வலியுறுத்தினர்.

மேலும் உடற்கல்வி ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை என கூறி மாணவர்கள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.