குற்றம்

கோபிசெட்டிபாளையம்: 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 3 பெண் புரோக்கர்கள் கைது!

webteam

விருதுநகர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் பகுதியில் 15 வயதான சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 3 பெண் புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், கடந்த 4ஆம் தேதி அதே பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் நடைபெற்று உள்ளது. அதைத் தொடர்ந்து ஈரோடு சைல்டு லைனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ள சிறுமி, புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஈரோடு சைல்டு லைன் ஆலோசகர் அளித்த தகவலின் பேரில் கோபி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமி இருக்கும் இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார் மரகதமணி, சிறுமியின் பெற்றோர்கள், மற்றும் தரகர்களாக செயல்பட்ட கோபியை சேர்ந்த சந்திரா, இவரது சகோதரிகள் அமுதா, கலைவாணி, விருதுநகரை சேர்ந்த மற்றொரு தரகர் அழகு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக 3 பெண் தரகர்கள் சந்திரா, அமுதா,கலைவாணி ஆகியோரை கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சிறுமியை திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார் மரகதமணி, சிறுமியின் பெற்றோர்கள், விருதுநகரை சேர்ந்த மற்றொரு தரகர் அழகு உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.