குற்றம்

கோகுல் ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு 3 ஆயுள் - முழுமையான தண்டனை விவரங்கள்

சங்கீதா

பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், கடந்த 5-ம் தேதி கோகுல் ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

போதிய சாட்சிகள் இல்லாததால், 5 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை விவரத்தை, மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. காலை அதுகுறித்த விசாரணை வந்தபோது, வழக்கு பிற்பகலுக்கு தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை ஒட்டி பிற்பகலில் தண்டனை விவரத்தை அறிவிப்பதாக நீதிபதி சம்பத் குமார் அறிவித்திருந்தார். அதன்படி, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ், அருண், குமார் உள்ளிட்ட 10 பேருக்கு தண்டனை விவரத்தை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் வழங்கினார்.

இதில், யுவராஜ் மற்றும் அருண் ஆகிய இருவருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது சாகும் வரையில் சிறை தண்டணை அளிக்கப்பட்டுள்ளது. குமார், சதிஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கும், குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்தால் ஆயுள் மற்றும் கூடுதலாக 5 ஆண்டுகளுடன் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது சாதியை சேர்ந்த பெண்ணிடம் பேசிக் கொண்டு இருந்ததற்காக, கோகுல்ராஜை கடத்தி கொண்டு சென்று இவர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

துவக்கத்தில் ஆள் காணவில்லை, சந்தேக மரணமாக கோகுல் ராஜ் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. கோகுல் ராஜ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மூலமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்குக்காக 106 சாட்சிகள், 500 ஆவணங்களை விசாரித்து தீர்ப்பளித்திருந்தது மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.