குற்றம்

இரவில் பூஜை செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை; கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் பூசாரி கைது

ஜா. ஜாக்சன் சிங்

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பூசாரி ஒருவரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூரை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி. இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே, ஹேமமாலினிக்கு நாகதோஷம் உள்ளதாகவும், பூஜை செய்தால் தோஷம் தீரும் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததால் கடந்த 13-ஆம் தேதி மாணவியின் உறவினர்கள் அவரை பூண்டியை அடுத்த வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரமத்தில் முனுசாமி என்ற பூசாரியிடம் அழைத்து சென்றனர். அப்போது இரவு அங்கேயே தங்கி பூஜை செய்ய வேண்டும் என பூசாரி கூறியதாக தெரிகிறது. இதன்பேரில், உறவினர்களுடன் மாணவி அங்கு தங்கியுள்ளார்.

மறுநாள் அதிகாலை, பூச்சி மருந்து குடித்து மாணவி ஹேமாமாலினி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஹேமமாலினியின் பெற்றோர், திருவள்ளூர் ஆட்சியரை சந்தித்து பூசாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் முதலில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில், மாணவி ஹேமாமாலினியை பூசாரி முனுசாரி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஹேமாமாலினி தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பூசாரி முனுசாமியை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை செய்தது; தற்கொலைக்கு தூண்டியது என 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.