குற்றம்

சென்னை: பிரபல கஞ்சா வியாபாரியை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள் - போலீசார் விசாரணை

webteam

புளியந்தோப்பு பகுதியில் பொதுக்கழிப்பறை சுவற்றில் அமர்ந்து பேசிகொண்ட இருந்தபோது, பிரபல கஞ்சா வியாபாரி கார்த்திகேயன் என்ற சேட்டு என்பவரை வெட்டி கொலை செய்து விட்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறை சுவற்றின் மீது நேற்று இரவு நண்பர்களுடன், பிரபல கஞ்சா வியாபாரி கார்த்திகேயன் என்ற சேட்டு என்பவர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சுமார் 7 பேர் கொண்ட கும்பல் கார்த்திகேயன் என்ற சேட்டு என்பவரை வெட்டி விட்டு சென்றனர். இதனைப் பார்த்த பொது மக்கள் கத்தி கூச்சலிட்டதும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, இரத்த வெள்ளத்தில் கிடந்த கஞ்சா வியாபாரி கார்த்திகேயன் என்ற சேட்டுவை, ஆட்டோவில் ஏற்றிச்சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கஞ்சா வியாபாரி சேட்டு இன்று அதிகாலையில் உயிரிழந்தார். இதையடுத்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.