குற்றம்

திருச்சி மத்திய சிறையில் சிக்கிய கஞ்சா, செல்போன், சிம் கார்டு! 4 பேர் மீது வழக்குப்பதிவு

webteam

திருச்சி மத்திய சிறைச்சாலையில் கஞ்சா, செல்போன், சிம் கார்டுகள் வைத்திருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதிகள், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பல்வேறு அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், கஞ்சா, செல்போன் பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஜெயிலில் செல்போன், சிம் கார்டு, பேட்டரி மற்றும் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிறை அதிகாரி சண்முகசுந்தரம் திருச்சி மாநகர கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் திண்டுக்கல்லை சேர்ந்த கைதி வெள்ளத்துரை என்கிற அரவிந்த், மதுரை கைதி விக்னேஷ், சிவகங்கையை சேர்ந்த முகிலன் என்கிற ரவி மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த லாடன் தாஸ் ஆகிய நான்கு கைதிகள் மீதும் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.