குற்றம்

”இந்த பணத்துக்கு ஆவணம் இருக்கா?”..சென்னையில் குருவிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல்!

webteam

சென்னையில் குருவிகளை குறிவைத்து பின் தொடர்ந்து கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பஷீர் அகம்மது என்பவர் கடந்த 12 ஆம் தேதி தன்னிடம் உள்ள சுமார் 460 கிராம் தங்க நகையை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் நகைக் கடையில் சுமார் 24 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார். பின்னர் தனது நண்பரான திருவல்லிக்கேணியைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பணத்துடன் சென்றுள்ளார்.

அப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகே வரும்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் தங்களை காவல்துறையினர் எனக் கூறி அவர்களை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த 24 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை கேட்டுள்ளனர். ஆவணம் இல்லாததால், காவல் நிலையத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு 4 பேரும் சென்றுள்ளனர்.

இதையடுத்து காவல் நிலையத்துக்கு பஷீர் அகம்மது சென்ற போதுதான், அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார், பஷீர் அகம்மதுவிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வெளிநாட்டிலிருந்து தங்கங்களை கொண்டு வரும் குருவிகளிடமிருந்து, தங்கத்தை பெற்று, அதனை விற்று பணமாக்கும் வேலையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து பஷீரின் புகாரை பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினார். இது தொடர்பாக, நாகர்கோவிலைச் சேர்ந்த பசூல் மகமூத், அவருடைய மகன் பரூக் தாகா, மற்றும் இருதய ஆரோக்கிய பிரகாஷ், இவர்களுடைய நண்பர்களான வேளச்சேரியைச் சேர்ந்த காதர் மைதீன், நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட ஆறு பேரை பூக்கடை போலீசார் கைது செய்தனர்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பாரீஸில் ஹவாலா பணம் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், எனவே சுமார் பத்து நாட்களாக இந்த பகுதியில் நோட்டமிட்டு, இங்கு வரக்கூடிய குருவிகளை குறி வைத்து, அவர்களுடைய கவனத்தை திசை திருப்பி, போலீசார் எனக் கூறி கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று, இதில் நான்கு பேர், மப்டி பணியில் உள்ள போலீசார் போன்று வெள்ளை சட்டை காக்கி பேண்ட் அணிந்து கொண்டு, குருவிகளின் கவனத்தை திசை திருப்பி, பயமுறுத்தி 24 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட பசூல் முஹம்மது மீது கடந்த 2001 ஆம் ஆண்டு திருச்சியில், இதேபோன்று குருவிகளின் கவனத்தைத் திசை திருப்பி, கொள்ளையடித்த வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையடித்த 24 லட்சம் ரூபாய் பணத்தில், ஏழு லட்சம் ரூபாய் பணம் வரை செலவு செய்து ஆடம்பரமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 17 லட்ச ரூபாயை போலீசார் கொள்ளையர்களிடம் இருந்து மீட்டுள்ளனர்