குற்றம்

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வாலிபரை வெட்டி செல்போனை பறித்த கும்பலால் பரபரப்பு

Veeramani

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ஆந்திரா வாலிபரை வெட்டி விட்டு செல்போனை பறித்து சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது

ஆந்திராவைச் சேர்ந்தவர் பூபால அசோக். இவரது தோழி ஒருவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சென்னை வந்த பூபால அசோக் இன்று சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தோழியை சந்தித்து பேசினார்.

அப்போது டிக்கெட் கவுண்டர் அருகில் இருந்த கழிவறைக்கு சென்றார். பின் தொடர்ந்து சென்ற 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பூபால அசோக்கிடம் செல்போனை கேட்டுள்ளனர். தரமறுத்ததால் கை, காலில் வெட்டி விட்டு செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.



ரத்த காயத்துடன் கிடந்த அவரை ரயில்வே போலீசார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பூபால அசோக்கிடம் பறித்து சென்ற செல்போன் அவரது தோழியுடையது என்பது தெரிந்தது.

அங்குள்ள சிசிடிவி காட்சியை கைப்பற்றி ரயில்வே போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.