தருமபுரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கி வாகனங்களை சேதப்படுத்தியதாக 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தருமபுரி பகுதியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்யும் ஹைவே பேட்ரல் வாகனத்தில் காரிமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சௌந்தரராஜன் மற்றும் காவலர்கள் அருண்குமார் வெங்கடேசன் ஆகிய மூவரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கனரக வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அதனை கண்ட உதவி காவல் ஆய்வாளர் சௌந்தர்ராஜன் அவர்களிடம் சென்று விசாரணை செய்துள்ளார். அப்போது முருகன் என்பவர் தான் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுவதாகவும், அனைவரும் அரசு ஊழியர்கள் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நால்வரையும் எச்சரித்த உதவி காவல் ஆய்வாளர் வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து வாகனத்திற்குச் சென்ற உதவி காவல் ஆய்வாளரை நால்வரும் அழைத்துள்ளனர். இதையடுத்து மது போதையில் இருந்த நால்வரும் உதவி காவல் ஆய்வாளர் சவுந்தரராஜனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.
இதனை அறிந்த வாகனத்தில் இருந்த இரண்டு காவலர்களும் வந்து கேட்டபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி மது பாட்டில்களை கையிலெடுத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதில் சந்தோஷ்குமார் என்பவர் தான் ஆயுதப்படை காவலர் என்று அடையாள அட்டையை காண்பித்து, எந்த அதிகாரியிடம் பேச வேண்டும் என கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த காவலர்கள் வாகனத்தில் ஏறி சென்றுள்ளனர். ஆனால் காவல்துறை வாகனத்தை விடாமல் நால்வரும் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் காவல்துறை வாகனம் முகப்பு விளக்கு சேதமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் சௌந்தர்ராஜன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தருமபுரி நகர காவல் துறையினர் நால்வரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் முருகன், முனிராஜ், விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகிய நான்கு பேரும் பிடமனேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இதில் முருகன் என்பவர் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருவதும், சந்தோஷ் குமார் என்பவர் ஊர்க்காவல் படையில் இருந்து பல்வேறு புகார் அடிப்படையில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.