குற்றம்

451 கிலோ கஞ்சா கடத்தப்பட்ட வழக்கு: நால்வர் விடுவிப்பு; 2 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை!

webteam
ஆந்திராவிலிருந்து 451 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கில், இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், பைனான்சியர் உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தினர், எம்.ஏ. நகர் சுங்கசாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மினி வேனில் 18 மூட்டைகளில் 100 கிராம் பொட்டலங்களாக வைக்கப்பட்டிருந்த 451 கிலோ கஞ்சாவை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த பைனான்சியர் சிராஜுதீன், மினி வேன் உரிமையாளர் அருண்பாண்டி, விக்னேஷ், சென்னையை சேர்ந்த சரவணமூர்த்தி, விசாகப்பட்டினத்தை சேர்ந்த நக்கா பானு பிரகாஷ், கண்டி கிருஷ்ணா, விழுப்புரத்தை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் மீது செங்குன்றம் காவல் நிலைலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கை சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் விசாரித்தார். 5வது குற்றம்சாட்டப்பட்ட நபரான நக்கா பானு பிரகாஷ் தலைமறைவாகி உள்ளதால் மற்ற 6 பேர் மீதான வழக்கு மட்டும் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், மினி வேன் உரிமையாளர் அருண்பாண்டி, விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகள் மட்டும் நிரூபிக்கப்பட்டதாக கூறி, இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் அருண்பாண்டிக்கு 2,90,000 ரூபாய் அபராதமும், விக்னேஷுக்கு 1,70,000 ரூபாய் அபராததமும் விதித்து உத்தரவிடுள்ளார்.

சிராஜுதீன், சரவணமூர்த்தி, கண்டி கிருஷ்ணா, கார்த்திக் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் காவல்துறையால் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, நால்வரையும் விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.