குற்றம்

பட்டியலின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகார் - ஐஐடி முன்னாள் மாணவர் கைது

Sinekadhara

சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சக மாணவர்கள் சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பேராசிரியரிடம் மாணவி புகார் தெரிவித்திருந்தார். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புகாருக்கு ஆளான மாணவர்கள் உட்பட 8 பேர் மீது கடந்தாண்டு மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

9 மாதமாகியும் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய பாதிக்கப்பட்ட மாணவி, இதுதொடர்பாக கடந்த 22ஆம் தேதி மகளிர் ஆணையத் தலைவரிடம் புகார் கொடுத்தார். தனது புகார் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவர்களைத் தேடி மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் மேற்குவங்கம் சென்றனர். அங்கு, சென்னை ஐஐடி முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்ஷூக் தேப்சர்மாவை கைது செய்தனர். அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை நடத்த மயிலாப்பூர் தனிப்படை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.