குற்றம்

”இங்கு புலிக்குட்டி விற்பனைக்கு’’.. வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வச்சு தானாக ஆக சிக்கிய இளைஞர்!

”இங்கு புலிக்குட்டி விற்பனைக்கு’’.. வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வச்சு தானாக ஆக சிக்கிய இளைஞர்!

webteam

ரூ.25 லட்சத்துக்கு புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளதாக வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். திருப்பதியில் சட்டம் பயிலும் இவர் வேலூர் மாநகருக்குட்பட்ட சார்ப்பனாமேடு பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்த்திபன் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புலிக்குட்டி ஒன்று விற்பனை உள்ளது என்றும் அதன் விலை 25 லட்சம் என்றும். முற்றிலும் இது உண்மையான தகவல் எனவும் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனை கண்காணித்த சென்னையை சேர்ந்த தலைமை வனத்துறையினர் இது குறித்து வேலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து வேலூர் வன அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சார்பனமேடு பகுதியில் வசித்து வந்த பார்த்திபனை 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னை வனத்துறையினர் தமிழ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூரில் கைதான பார்திபன் இதில் இடைதரகராக செயல்பட்டவர் என்றும் சென்னையை சேர்ந்த தமிழ் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சென்னை மற்றும் வேலூர் வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.