குற்றம்

கோடம்பாக்கத்தில் மதுபோதையில் காவலரை தாக்கும் நபர்கள் - வீடியோ!

webteam

சென்னை கோடம்பாக்கத்தில் மதுபோதையில் இருந்த 4 பேர் காவலரை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பாண்டிபஜார் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் கார்த்திகேயன் கடந்த 13ஆம் தேதி இரவு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருந்த நான்கு பேர் திருநங்கைகளிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட கார்த்திகேயன், அவர்களை எச்சரித்து போகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த 4 பேரும் தாங்கள் வழக்கறிஞர்கள் என்று கூறி காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து காவலர் தனது பைக்கில் வைத்திருந்த லத்தியை எடுத்து அவர்களை தாக்கியுள்ளார். மேலும் வாக்கி டாக்கி மூலம் மற்ற காவலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அந்த 4 பேர் காவலரை தாக்கியதோடு, வாக்கி டாக்கியையும் பிடுங்கி உடைத்துள்ளனர். 

இந்நிலையில் ரோந்து பணியிலிருந்த மற்ற காவலர்கள் அங்கு வந்து 4 பேரையும் கைது செய்தனர். ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அந்த 4 பேரும் வழக்கறிஞர்கள் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 13ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தின் செல்போன் காட்சி வெளியாகியுள்ளது.