குற்றம்

திருவாரூர்: சாலையோர கடைகளில் திடீர் ரெய்டு - குட்கா விற்ற கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

webteam

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இன்று ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாகவும், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாகவும், முந்திரி தோல்களை எரிப்பதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சௌமியாவுக்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து புகார் வந்துள்ளது.

இந்த புகார், சரியான இடத்தில் உணவு அருந்துங்கள் (EAT RIGHT )என்ற திட்டத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த EAT RIGHT திட்டமானது, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நிர்வாகம் பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் நோக்கத்தின் அடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சௌமியா தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மேற்கொண்ட அந்த ரெய்டில், குட்கா விற்ற கடையொன்றுக்குகு சீல் வைக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகள், சுகாதாரமற்ற முறையில் இருந்த கடைகள் ஆகிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிறிய கடைகளுக்கு 2,000 ரூபாயும் பெரிய கடைகளுக்கு 3,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் 20 மூட்டை முந்திரி தோல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சரியான இடத்தில் உணவு அருந்துங்கள் (Eat right)திட்டம் மாவட்டம் முழுவதும் சரியான முறையில் செயல்படுத்தப்படும் என்று திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சௌமியா, ரெய்டுக்குப் பின் தெரிவித்தார்