குற்றம்

சென்னை: உணவு டெலிவரி ஊழியர் வெட்டிக்கொலை

Veeramani

சென்னையில் டெலிவரி ஊழியரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 3-வது தெருவை சேர்ந்தவர் அஜித்குமார்(24). இவர் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணியை முடித்து விட்டு நடுக்குப்பம் 7வது தெருவில் தனது நண்பர்களுடன் அஜித் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென 6பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கு வந்து கத்தியால் அஜித்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர்.

படுகாயமடைந்த அஜித்தை அருகிலிருந்த நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அஜித் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மெரினா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்டுள்ள அஜித் மீது ஜாம்பஜார், ராயப்பேட்டை, மெரினா உட்பட பல காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்டதற்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு பிரச்னையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.