போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு கோப்பு படம்
குற்றம்

கணவரை பழிவாங்க சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலியான வழக்கு - மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை!

ஜெனிட்டா ரோஸ்லின்

6 ஆண்டுகளுக்கு முன்பு போலியான மருத்துவ பதிவேடுகளை உருவாக்கி தன் சொந்த மகளையே, தனது கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மாநகர போக்சோ நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 20, 2019 ஆம் தேதி தனது 14 வயது மகள் தன் கணவரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று பெண் ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரணையும் தொடர்ந்துள்ளது.

அப்போது இது குறித்து அந்த பெண் போலீசாரிடத்தில் தெரிவிக்கையில், தனது மகள் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறுநீரக பிரச்னையால் அவதிஅடைந்ததால் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்கேனிங் சென்டரில் சிறுநீரக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டதில் தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்ததுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு தனது கணவர்தான் காரணம் என கூறி மருத்துவ ஆவணங்களையும் காவல்நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். இதனால் சிறுமியின் தந்தையின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இப்பெண் சமர்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தொடர் விசாரணையின் மூலம் தெரியவரவே, இதனை விசாரித்த சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி, எம்.ராஜலட்சுமி இப்பெண்ணுக்கு ரூ 6000 அபராதத்தையும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் பிறப்பித்து அதிரடி உத்தரவினை வழங்கியுள்ளார்.மேலும், சிறுமியின் தந்தைக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கினையும் ரத்து செய்துள்ளார்.

முன்னதாக வழக்கு தொடர்பட்ட காலத்தில், கணவன் மனைவிக்கு இடையே விவகரத்து தொடர்பான பிரச்னைகள் எழுந்துவந்ததால், தனது கணவனை பழிவாங்க இத்தகைய செயலில் அப்பெண் இறங்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.