குற்றம்

சத்தியமங்கலம்: இரவில் காரில் வந்து ஆடுகளை திருடும் மர்ம கும்பல் - விவசாயிகள் அச்சம்

kaleelrahman

சத்தியமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் டாடா சுமோ காரில் வந்து ஆடு திருடும் கும்பல். நேற்று இரவு 13 ஆடுகளை திருடிச் சென்றதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சத்தியமங்கலம் அருகே உள்ள இக்கரை தத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார்.

இவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே பவானி ஆற்றங்கரையில் உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைத்து வைப்பது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சென்று பார்த்தபோது பட்டியில் இருந்த 13 செம்மறி ஆடுகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் இப்பகுதியிலுள்ள வெள்ளியம்பாளையம் புதூர் காலனியைச் சேர்ந்த ரங்கன் என்பவரது இரண்டு வெள்ளாடுகளும் திருடுபோயின.

இரவு நேரத்தில் டாட்டா சுமோ காரில் வந்த ஒரு கும்பல் ஆடுகளை திருடிச் செல்வதாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்றிரவு சிவப்பு நிற காரில் வந்த கும்பல் ஆடுகளை திருடி கொண்டு அந்த கிராமத்தின் ஒரு சாலை வழியே செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.