குற்றம்

சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

webteam

தருமபுரி அருகே, பிளஸ் 1 படிக்கும் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் பழனி. கூலித்தொழிலாளி. இவர் திருமணத்திற்கு பிறகு கேரளாவில் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். அப்பொழுது இவரது மனைவி தனக்கு பிறந்த பெண்குழந்தையை தனது தாயின் வீட்டில் பராமரிப்பில் விட்டுவிட்டு வேறு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பழனி வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் தொடர்ந்து அடிக்கடி தனது முதல் மனைவிக்கு பிறந்த மகளை சந்தித்து செலவுக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமி பாட்டியின் பராமரிப்பில் இருந்து கொண்டு, அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். 

இந்நிலையில், சிறுமியை தனது மொபைல்போனில் ஆபாச படம் பார்க்கும்படி பழனி வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு, அங்கிருந்து சிறுமி தப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி இரவு 9 மணிக்கு, சிறுமியை பைக்கில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் பழனி. மேலும், இது குறித்து, வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறுமியின் தாய் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பொம்மிடி காவல் துறையினர் பழனியை பிடித்து வந்து அரூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் இலட்சுமி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.