குற்றம்

கிருஷ்ணகிரி: துப்பாக்கியால் சுட்ட தந்தை; உயிரிழந்த கர்ப்பிணி மகள்

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெற்றோரின் தகராறை தடுக்க முயன்றபோது, தந்தை துப்பாக்கியால் சுட்டதில் கர்ப்பிணி மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதையன் தொட்டி பகுதியைச் சேர்ந்த அருணாசலம், மாதேவி தம்பதியினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மூன்று மாதமான கர்ப்பிணி மகள் வெங்கடலட்சுமி, பெற்றோரின் தகராறை தடுக்க முயன்றுள்ளார். அந்த நேரத்தில், திடீரென ஆத்திரமடைந்த அருணாசலம் வீட்டில் உரிமம் இல்லாமல் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் தனது மனைவியை சுட முயன்றுள்ளார்.

வெங்கடலட்சுமி அதை தடுக்க முயன்றபோது, எதிர்பாரத விதமாக அவரது மார்பில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து தளி காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள அருணாசலத்தை தேடி வருகின்றனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில், கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.