குற்றம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மற்றும் காதலன் போக்சோ சட்டத்தில் கைது

kaleelrahman

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தந்தை மற்றும் சிறுமியின் காதலன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மானாத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமியை அனுமதித்தார். அப்போது மருத்துவர் சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமி 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தந்தை முனியசாமி (39), மற்றும் சிறுமியை காதலித்து வந்த ஓட்டப்பிடாரத்தை அடுத்த மேட்டூர் வ.உ.சி காலனியைச் சேர்ந்த ராசுக்குட்டி மகன் அழகு என்ற அறிவுமதி (19) ஆகிய இருவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.