குற்றம்

வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த விவசாயி கைது

webteam

அகரம் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா வளர்த்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த விவசாயி மற்றும் அவரது நண்பர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (28). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து அதன் மூலம் கஞ்சாவை கல்லூரி பகுதிகளில் விற்பனை செய்வதாக நாகரசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகரசம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சிவசந்தர் தலைமையில் சென்ற குழு, திடீரென பழனி தோட்டத்தில் சோதனையிட்டனர். அப்போது வளர்ந்து முற்றிய நிலையில் இருந்த இரண்டு கஞ்சா செடியை கண்டறிந்தனர்.

கஞ்சா வளர்த்த விவசாயி பழனி மற்றும் அதனை விற்பனை செய்துவந்த அவரது நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (21) ஆகிய இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் வளர்த்த 3 கிலோ எடையுள்ள கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். தனது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து, அதன் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு விற்பனை செய்த சம்பவம் கிராமத்தினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.