குற்றம்

இன்னும் எத்தனை கொலைகள்! குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

webteam

திருவேற்காட்டில் குடிபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

திருவேற்காடு, காமதேனு நகரைச் சேர்ந்தவர் டில்லி (63), இவரது மகன் பிரகாஷ் (35), டிரைவராக வேலை செய்து வந்த இவர், மனைவி தேவி மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பிரகாஷ் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி எப்போதும் போதையிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தினமும் குடித்து விட்டு வந்து அடிக்கடி தந்தை மற்றும் மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி தேவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருவேற்காடு, பெருமாளகரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்க்குச் சென்று விட்டார்.

மனைவியும் கோபித்துக் கொண்டு சென்று விட்டதால் கடும் ஆத்திரத்தில் இருந்த பிரகாஷ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது தந்தை டில்லியுடன் தகராறு செய்துள்ளார். இதில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் பெற்ற தந்தை என்றும் பார்க்காமல் அவரை கீழே தள்ளி சுவற்றில் தலையை மோத வைத்து அடித்து உதைத்துள்ளார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த டில்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார், டில்லியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருவேற்காடு போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.