குற்றம்

கணவன் உயிரிழப்பால் மன உளைச்சல்.. தற்கொலை செய்துகொண்ட மனைவி, மகள்..!

webteam

நாகர்கோவில் அருகே வறுமையின் காரணமாக குடும்பமே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த வடிவேல் முருகன் - பங்கஜம் தம்பதிக்கு 40 வயதை கடந்த திருமணமாகாத இரண்டு மகள்கள் இருந்தனர். 70 வயதை கடந்த வடிவேல் முருகன் மட்டுமே வேலை பார்த்து குடும்பத்தை காத்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் காயம் காரணமாக வடிவேல் முருகன் வேலைக்கு செல்லாததால், குடும்பம் பசியும், பட்டினியுமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தாய் மற்றும் இரண்டு மகள்களும் தற்கொலை செய்ய திட்டமிட்டு, கைகளை இணைத்து கட்டியபடி, இளைய நயினாரில் பகுதியில் உள்ள  குளத்தில் மூழ்கியுள்ளனர். இதில் தாய் பங்கஜமும், மூத்த மகள் மாலாவும் உயிரிழந்தனர். இளைய மகள் சச்சு உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரிடம் நடத்திய விசாரணையில், நேற்றிரவு தந்தை உயிரிழந்ததால், அவரது உடலை வீட்டிலேயே விட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சச்சு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர்களது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அவரது தந்தை வடிவேல் முருகனின் உடலை கைப்பற்றினர்.