குற்றம்

மருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது

webteam

சென்னையில் மருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை கேகே நகரில் உள்ள மருத்துவ கல்லூரியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் கணேசன். இவர் முன்னாள் ராணுவ வீரர். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்த கல்லூரியில் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில் அதே கல்லூரியில், விடுதியில் தங்கி நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்தே அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார் கணேசன். இதையடுத்து அந்த மாணவி தனது கல்லூரி டீனிடம் புகார் அளித்துள்ளார். 

இதனால் கணேசன் கல்லூரி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நவம்பர் 20ஆம் தேதி மருத்துவ மாணவிக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் தன்னை நேரில் சந்திக்க வர வேண்டும் எனவும் கணேசன் குறிப்பிட்டிருந்தார். 

சுதாகரித்து கொண்ட மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறினார். இதையடுத்து பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை சந்திக்க வந்த கணேசனை கைது செய்தனர்.