குற்றம்

வாங்கிய கடனை வட்டியோடு செலுத்திய பிறகும் பணம் கேட்டு மிரட்டுறாங்க – புகாரில் ஒருவர் கைது

webteam

வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்த பிறகும் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை, ராமசாமி ஐயர் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (53), இவர் கடந்த 6 ஆம் தேதி சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், குரோம்பேட்டையைச் சேர்ந்த நாகூரான் என்பவரிடம் அவசர தேவைக்காக 18.30 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றதகாவும், அதை வட்டியும் அசலுமாக சேர்த்து 28.40 லட்சம் ரூபாய் திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால், நாகூரான் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் கொடுத்த மொத்த பணமும் வட்டி தான், வாங்கிய பணத்தை திரும்பத் தர வேண்டும் என மிரட்டி வருகின்றனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகவும், கடந்த 29 ஆம் தேதி வீட்டிற்கே வந்து வட்டியும் அசலும் தரவில்லை என்றால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் அவர்கள் நடவடிக்கை எடுக்கும் படி குறிப்பிட்டிருந்தார்.

அதன் பேரில் நாகூரான் கைது செய்யப்பட்டு அவரை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை சிட்லபாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.