குற்றம்

கோடநாடு வழக்கு: ஓம் பகதூரை கட்டிவைத்த மரத்தை எஸ்டேட் நிர்வாகம் வெட்டியது ஏன்?

webteam

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இரவு காவலாளி ஓம் பகதூரை கொலைசெய்து தலைகீழாக கட்டிவைத்த மரத்தை எஸ்டேட் நிர்வாகம் வெட்டி அகற்றி இருப்பதும் அதற்கு பதிலாக மரக்கன்றை அதே இடத்தில் நட்டு வளர்த்து வருவதும் தனிப்படை விசாரணையில் கண்டறியபட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கோடநாடு பங்களாவில் கொள்ளையில் ஈடுபட்ட கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட் 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பங்களாவில் கொள்ளை அடிக்க 8-நம்பர் கேட் வழியாக சென்றுள்ளனர். பங்களாவின் முன்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இரவு காவலில் இருந்த கிருஷ்ண தாபாவை தாக்கி லாரியில் கட்டிவைத்த அவர்கள் பின்னர் 10-நம்பர் கேட்டில் இருந்த ஓம் பகதூரை அங்கிருந்த மரத்தில் தலைகீழாக கட்டிவைத்து கடுமையாக தாக்கி கொலை செய்தனர்.

தொடக்கத்தில் கோத்தகிரி போலீசார் விசாரித்த அந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி கூடுதல் டிஜிபி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில் ஓம்பகதூர் தலைகீழாக கட்டிவைத்து கொலை செய்யபட்ட மரம் வெட்டி அகற்றி இருப்பதும் அதற்கு பதிலாக புதிதாக மரக்கன்று ஒன்றை நட்டு வளர்த்து வருவதும் தெரியவந்துள்ளது. தற்போது அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றபட்டுள்ள நிலையில் மரம் வெட்டி அகற்றபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. வழக்கு விசாரணை நிறைவடையாத நிலையில் மரத்தை வெட்டி அகற்றியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

- ஜான்சன்