குற்றம்

ஈரோடு: குடும்பத் தகராறில் அக்கா மகன்களை கொலை செய்த தாய்மாமன் உட்பட இருவர் கைது

webteam

ஈரோட்டில் குடும்பத் தகராறு காரணமாக அக்கா மகன்களை கொலை செய்த தாய்மாமன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனியைச் சேர்ந்த இயற்கை உணவு பொருட்கள் விற்பனை செய்து வருபவர்கள் சகோதரர்களான கௌதம் மற்றும் கார்த்தி, இவர்களை கடந்த திங்கட் கிழமையன்று அவர்களது தாய்மாமன் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டார். இதனையடுத்து நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் தலைமையிலான 5 ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை போலீசார், கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்த பைனான்ஸியரும் உயிரிழந்த சகோதரர்களின் தாய்மாமனுமான ஆறுமுகசாமி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கவின் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், சம்பவத்தன்று ஆறுமுகசாமிக்கும் சகோதரர்கள் கௌதம் மற்றும் கார்த்தி ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கௌதம் மற்றும் கார்த்தியை குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு உதவியாக கவின் என்பவர் இருந்ததும் தெரியவந்தது. உயிரிழந்த கார்த்தி நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.