பாலகிருஷ்ணன்.-பிரபாவதி
பாலகிருஷ்ணன்.-பிரபாவதி file image
குற்றம்

ஈரோடு | முதியவர்களைத் தாக்கிவிட்டு நகை, பணம் கொள்ளை; சாரி சொல்லிவிட்டுச் சென்ற கொள்ளையர்கள்!

PT WEB

ஈரோடு மாவட்டம் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி பிரபாவதி. இவர்கள், நேற்று வழக்கம் போல் இரவு உணவை முடித்துவிட்டு சீரியல் பார்த்துள்ளனர். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் டிவியின் சத்தத்தை அதிகரித்துள்ளனர்.

நாற்காலியில் அமர்ந்திருந்த பாலகிருஷ்ணனின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் பிரபாவதியின் முகத்தைத் துணியால் மூடி கழுத்தை நெரித்துச் சத்தம்போடாமல் அவர் அணிந்திருந்த நகைகளைக் கழட்டச் சொல்லியுள்ளனர்.

பிரபாவதி

இதனையடுத்து பாலகிருஷ்ணன் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். அந்த நேரத்தில் மூதாட்டி பிரபாவதி "விநாயகரே இப்படிச் செய்து விட்டாய்" எனப் புலம்பியுள்ளார். இதற்கு கொள்ளையன் ஒருவன் "இந்த நேரத்தில் நீ சாமி கும்பிடுகிறாயா" எனக் கேட்டுவிட்டு, வீட்டிலிருந்த நான்கு செல்போன்கள், கார் மற்றும் பைக் சாவியை எடுத்துள்ளதாக தெரிகிறது.

பின்னர் பிரபாவதியிடம் "இந்த விஷயத்தைப் போலீஸில் தெரிவித்தால் உன்னை விட்டுவிட்டு, உன் கணவரைக் கொலை செய்து விடுவேன்" என மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் "ஒரு வாரத்தில் உனது கார் இங்கேயே இருக்கும்; எடுத்துக்கொள்" என்றும் "25 நாட்களில் உனது நகைகள் திருப்பி உன்னிடம் வந்துவிடும்" என்றும் கூறி விட்டுச் சென்றுள்ளனர். அப்போது ஒரு கொள்ளையன் மூதாட்டி பிரபாவதியிடம் "சாரி" எனச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளான்.

காயமடைந்த பாலகிருஷ்ணன்

இந்தநிலையில் கொள்ளையர்களின் தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும் உதவிகேட்க முடியாமல் தவித்துள்ளனர். ஒருவழியாக பின்னர் வீட்டிற்கு வெளியே வந்து சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்த முயன்றுள்ளனர். இரவு நேரம் என்பதால் யாரும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். பின்னர் அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு நபரின் உதவியால் இச்சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சென்ற போலீசார் கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்த இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.